சனி, 20 ஜூலை, 2013

தாய் மொழிவழிக் கல்வியின் காலன்கள்

கடந்த "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி" என்ற கட்டுரையில் தமிழக அரசு அவசரமாக வேறு மொழிமூலம் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதையும் அதன் விளைவுகளையும் குறித்து எழுதியிருந்தேன்.

இன்றைய காலகட்டத்தில் அரசு என்பது அரசியல் கட்சிகளுக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பாக உள்ளது.  அரசியல் கட்சிகளோ நமது விவசாய நிலங்களை கூறுபோட்டு விற்கும் மனிதர்களும் கல்விநிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகளும் தலைவர்களாகக் கொண்டுள்ளது.  எனவே மேற்கண்ட பதிவின்படி அரசு தாய் மொழியை காக்கும் என்று எதிர்பார்ப்பது தவறானது, அதற்கு வாய்பே இல்லை.  தாய்நிலத்தையே கூறு போட்டு விற்பவர்களா மொழியை காக்க வளர்க்கப் போகிறார்கள்? சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும் சமூக/இன ஆர்வலர்களுக்கும் தான் இந்தப் பொறுப்பு உள்ளது. ஆனால் அவைகளோ தொலைநோக்குப் பார்வை இல்லாமல் குறுகிய கண்ணோட்டத்தோடு  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன.

மேற்கண்ட பதிவில் குழந்தைகள் எந்த மொழியில் கற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண பொது மக்களோ இவ்வாறு பகுத்து ஆராய்ந்து துணிந்து முடிவு எடுக்கக் கூடியவர்கள அல்ல.  இதனைப் பயன்படுத்தி மக்களை குழப்பி சிந்திக்க விடாமல் தனது கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்க்க வைக்கின்றனர். எந்த பன்னாட்டு நிறுவனமும் சதித் திட்டம் தீட்டி வேறு மொழிமூலம் கல்வியை புகுத்தவில்லை.  காரணம் தமிழகம் தவிர்த்து வேறு எங்கும் இவ்வளவு மோசமான நிலையில்லை.  ஒரு வேளை பன்னாட்டு நிறுவனங்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தால் ஏன் மற்ற மாநிலங்களை தவிர்த்து தமிழகத்தில் மட்டும் புகுத்த வேண்டும்? அது போல L. P. G தாரளமயமாக்கல் தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் கொள்கையினால் விளைந்த விளைவாகவும் இதை எடுத்துக் கொள்ள இயலாது. மேற்கண்ட ...மயமாக்கல் தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பொருந்தும். அது மட்டுமல்ல உலகத்திற்கே இது பொருந்தும். இந்த சூழ்நிலையில் தான் சீனாவும் ....மயமாக்கியுள்ளது.  ஆனால் சீன அரசு அரசின் இணையதளங்கள் அனைத்திலும் தற்போது சீனத்தை தவிர்த்து வேறு மொழியில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதாக செய்தி உள்ளது. எனவே தாய்மொழிக் கல்வியை ஒழித்தது ....மயமாக்கலோ, பன்னாட்டு நிறுவனங்களின் சதியோ அல்ல.  இங்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் பணத்தாசை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கினால் பணம் கிடைக்கும் என்று சகட்டு மேனிக்கு தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பள்ளி நிறுவனங்கள் இலாபம் பார்க்க வேறு மொழிக் கல்வி ஆடம்பர கட்டமைப்பு வசதிகள் என்று தனது பள்ளியை மார்கெட்டிங் செய்ததன் விளைவு இது. அதை தட்டிக் கேட்வேண்டிய சமூக இயக்கங்களும் அமைப்புகளுக்கும்  சமூக/இன ஆர்வலர்களுக்கும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று அறிக்கைகளோடு அடையாளத்தை பதிவு செய்து விட்டு தன் பிள்ளைகளை அதே தனியார் பள்ளிகளில் வரிசையில் நின்று சேர்த்துவிட்டனர்.

பொதுவாக சாதாரண பொது மக்கள் ஆழ்ந்து ஆராய்து பார்ப்பவர்கள் கிடையாது.  தனக்கு முன் பகட்டாக ஒருவர் எதைச் செய்தாலும் அதைப் போல செய்யவேண்டும் என்று செய்பவர்கள்.  உதாரணமாக ரஜினி கையை வைத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான் சேட்டை செய்ததும் அதைப்பார்த்து அப்படியே தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் செய்வதைப் பார்த்திருப்போம்.  அதே போல இங்கு உள்ள தொழிலதிபர்கள் உயர் அதிகாரிகள் அனைவரும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பதால் ஆங்கிலம் தெரிந்தால் உயர் அதிகாரியாக ஆகலாம், தொழிலதிபராகலாம் என்று எண்ணுகின்றனர். அது மட்டுமல்ல சமூக/இன ஆர்வலர்களுக்கு சமூக செயல்பாட்டு வட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுவதும் ஆங்கிலம் தெரிந்தவர் மட்டுமே முன்னிலையில் இருப்பதும் வழக்கத்தில் உள்ளது. ஆங்கிலம் தெரிந்தவர்களை முக்கியமான விவாதத்தின் போது தன் அருகில் வைத்துக் கொள்வதுமாக உள்ளது.  இந்த நிலையில் ஆங்கிலம் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்படுவது அல்லது களப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமாக உள்ளது.  இவற்றை கவனிக்கும் சாதாரண பொது மக்கள் எப்படி தாய்மொழிக் கல்வியை தேர்ந்தெடுப்பார்கள்.?

மேலும் தொழில்கள் வளர்ந்து கொண்டுள்ள இந்த நிலையில் தொழிலுக்குத் தேவையான் அனைத்துத் தகவல்களும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்வது அல்லது ஆங்கிலத்தில் தான் பெறுமுடியம் என வழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில் நிறுவனங்களில் பணிபுரியும் சாதாரண தொழிலாளர் அதிகாரிகள் தன்னிடம் காட்டும் அதிகார தோரனை பார்க்கும் போது, நிறுவனத்தில் பயன்பாட்டில் ஆங்கிலம் உள்ளதை பார்க்கும் போதும் அவர்களுக்கு மோகம் ஏற்படுவது இயற்கையே. இந்த சூழலில் ஆர்வலர்கள் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் அவர்களின் ஆழ்மனதில் பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட பாதிப்புகளே அவரை முடிவெடுக்க வைக்கும்.  ஆர்வலர்களோ இந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் உபதேசம் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.  உபதேசம் செய்யக்கூடியவர்கள் யாரேனும் நல்ல பொருளாதார நிலை வலுவாகவும் ஆங்கிலம் தெரியாமலும் உள்ளார்களா என்றால் இல்லை.  ஒன்று ஆங்கிலம் தெரிந்திருப்பார்கள் அல்லது பொருளாதார சூழ்நிலையில் பலவீனமாக இருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்தவர்கள் "தமிழில் படிக்கவை நான் 10 வகுப்புவரை ஆங்கிலமே தெரியாது பிறகு கற்றுக் கொண்டேன்" என்று கூறினால் உடனே அவர்கள் மனதில் "நீ 10 வகுப்பிற்குப் பிறகு கற்றதை நான் முதல் வகுப்பு முதலே கற்றவைக்கிறேன்" என்று கூறிக்கொள்வார். மேலும் ஆங்கிலம் தெரிந்ததால் தான் தனக்கு உபதேசம் செய்கிறாய் என்ற எண்ணமும் ஓடும். ஆங்கிலம் தெரியாத பொருளாதார நிலை பலவீனமானவர் எதையும் கூற இயலாது.  கூறினாலும் சரி உன் நிலை என்ன என்ற கேள்விதான் முதலில் வரும் அது நியாயமானதும் கூட. மேலும் உலகில் யாராவது உபதேசத்தை ஏற்பவர்கள் உண்டா? யாருக்காவது உபதேசம் பண்ணிணால் பிடிக்குமா?  நான் உட்பட என் தந்தை கூறினாலும் கூட கேட்பதில்லை.  எனது அனுபவத்தின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கிறேன்.  அதே போல மக்களுக்கும் எவ்வளவுதான் கூறினாலும் சரி சரி என்று கேட்டுக் கொள்வார்களே அன்றி தன்னைடைய வாழ்க்கைக்குத் தேவை என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் நம் மொழி குறித்து பேசும் போது விடுதலைப் புலிகள் அனைத்துத் தகவல்களையும் தமிழில் மொழிபெயர்த்து பிறகு தமிழில் தான் பயன்படுத்துவார்கள் என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.  ஆனால் இங்கு நடைமுறைப்படுத்த முயற்சிபதில்லை அவ்வளவு ஏன் அதைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. ஆங்கிலம் என்பது மொழி அதை எளிதில் கற்றுக் கொள்ளலாம் என்று உபதேசிப்பதற்கும் ஆங்கிலத்தின் தேவையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நடைமுறையில் ஆங்கித்தின் தேவையை குறைக்காத வரை ஆர்வலர்களின் பேச்சு "குறைப்பிற்குச்" சமம்.

தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் இதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்கியுள்ளது. முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்ட போது ஐ.நா. படைத் தளபதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர்கள் ஈராக்கிய மொழியில் கேட்டார்கள் ஆனால் இராணுவத் தளபதிகள் ஆங்கிலத்தில் விடையளித்தார்கள்.  எந்த மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை. அது பொறிமயமாக்கப்பட்டிருந்தது.  இனிவரும் காலங்களில் மொழிபெயர்ப்பு என்பது ஒன்றுமில்லாத்தாகிவிடும் எனவே அவரவர் அவரவர் மொழியிலேயே இருக்கலாம். 

எனது பணி கணினி செயலியாக்கம் உருவாக்கும் பணியாகும். இதில் உள்ள coding அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருக்கும் ஆனால் coding-க்கான குறிப்புகள் (Commands) ஆங்கிலத்தில் எழுதுவதற்க்குப் பதில் தமிழில் எழுதுகிறேன். தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழில் கையாளும் போது அங்கு பணியாற்றும் அனைவருக்கும் ஆவணங்கள் எளிதாகப் புரியும். எனவே உயர் அதிகாரிகளின் ஆங்கிலப் பூச்சண்டி வேலை செய்யாது.  சாதாரண மக்களுக்கும் ஆங்கிலம் தேவை என்ற மாயை தகர்ந்து போகும்.  இப்படி தமிழில் ஆவணப்படுத்தும் போது, கற்பதற்கு மட்டுமல்ல தொழிலுக்கும் தமிழ் அவசியமாகிறது. இதை உணர்ந்து தொழிலதிபர்களாக உள்ள தாய் மொழி ஆர்வலர்கள் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். நிறுவனத்தின் தொழிலாளராக அல்லாமல் ஒப்பத்த முறையில் தாய் மொழி ஆர்வலர்களை சிறு சிறு தொழிலதிபர்களாக உருவாக்க வேண்டும்.  இதைப் போன்ற ஆக்கப் பூர்வமான முறையில் மொழியைக் காப்பது பயன் தருமேயன்றி வேறு பிரச்சாரங்கள் புத்தக விற்பனையை மட்டும் ஏற்படுத்தும்..

3 கருத்துகள்:

  1. கோடிங் என்பதை நிரலி என்கிறார்கள்.

    இதைப் பற்றி விரிவாக எழுத யோசிக்க வைத்தமைக்கு நன்றி.

    செட்டிங் என்று வேர்ட் வெரிபிகேஷன் என்ற பகுதியில் உள்ள சொல் சரிபார்ப்பு பகுதியை நீக்கி விடுங்க.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு