வெள்ளி, 19 ஜூலை, 2013

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வஞ்சிக்கப்படும் பள்ளிக்கல்வி

இந்தக் கட்டுரையில் எனது அனுபவத்தை தெரிவித்து அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து விவரிக்கிறேன்.

இந்த கல்வியாண்டு (2013-14) எனது மகனை தாய் மொழியில் கல்வி கற்க கோவை தீத்திபாளையத்தில் உள்ள தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்சேர்த்தேன். ஆனால் தற்போது அரசின் அவசர ஆணையின் பேரில் அனைத்துப் பள்ளிகளிலும் வேறு மொழி மூலம் கல்வியை அறிமுப்படுத்தினார்கள்.  இதற்கு அப்பள்ளியில் குறைவான எண்ணிக்கையில் வகுப்பறைகள் இருந்ததால் கல்விக்குழு (!?) மற்றும் பெற்றோரிடம் 27.06.2013 அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டபோது அக் குழுவின் தலைவர் (அப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியர்) மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஒருதலை பட்சமாக தீர்மானம் எழுதிக் கொண்டார்கள்.  அதாவது வேறு மொழி மூலம் கல்வியை அறிமுகப்படுத்துவது பெற்றோர் விரும்பினால் தமிழில் தொடருவது என்று.

கூட்டத்தின் போது அக்குழுவின் தலைவர் "இது நல்ல வாய்ப்பு இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "இது நல்ல வாய்ப்பு அல்ல இது விரிக்கப் படும் சதிவலை இதில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவேண்டுமேயன்றி சிக்கிக் கொள்ளக்கூடாது " என்று கூறினேன்.  அதற்கு அவர் "எனது பிள்ளைகளை இதே பள்ளியில் தான் படிக்க வைத்தேன். அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.  அதற்கு நான் "பலன் என்றால் நல்ல பலனா அல்லது மோசமான பலனா?" என்றதும் அவர் மழுப்பலாக் "அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.  அதற்கு நான் "அப்படியென்றால் அதைப் பற்றி இப்பொழுது ஏன் பேச வேண்டும்" என்று கேட்டேன். பதில் கூறாமல் தீர்மானம் என்ன எழுத வேண்டும் என்று பஞ்சாயத்து துணைத் தலைவருடன் சேர்ந்து கூறிவிட்டு சென்று விட்டனர்.  இதே கூட்டத்தின் போது ஆசிரியர்கள் அரசின் இந்த அவசரத் திட்டத்தில் உள்ள மிகமுக்கியமான தீமைகளைப் பற்றி கூறினர்.  இப்பள்ளியில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட (SC/ST) மக்களின் பிள்ளைகள். அவர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்று கூடத் தெரியாது. இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள் என்று மட்டும் தான் கூறத் தெரியும் என்றும் மேலும் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டுச் சென்றதும் பையை வீட்டில் எங்கேயோ வைத்து விட்டு அடுத்த நாள் பள்ளிக்கு வரும் போதுதான் தேடுவார்கள் இந்த நிலையில் அவர்களை வேறு மொழி மூலம் கல்வி கொடுக்கும் போது அது அந்த மாணவர்களும் பெரும் வெறுப்பைத் தரும் என்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் இதையும் தீர்மானத்தில் தெரிவிக்காமல் மறைத்து விட்டனர் கல்விக் குழுவினர். அப்பொழுது அங்கு வந்த கல்வித்துறை அதிகாரி பெண் (AEO-Assistent Educational Officer) ஒருவர் வந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளதால் ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றல் செய்ய வேண்டிவரும் எனவே அரசுப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தனியார் கல்வி நிறுவனங்களைப் போல வேறு மொழி மூலம் ஆரம்ப கல்வியை அறிமுப்படுத்தியதாக் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது எனது எதிர்ப்பைத் தெரிவித்து கருத்தைக் கூறிய போது தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்றும் அரசு தான் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளதாக கூறினார்.  நான் எனது எதிர்ப்பை எழுத்து மூலம் அளிப்பதாகக் கூறி விடைபெற்றேன்.  

பிறகு எனது கருத்தை 01.07.2013 தேதியிட்ட கடிதம் மூலமாக தெரிவித்து தலைமை ஆசிரியையிடம் அளித்து கடிதம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை கேட்ட போது ஒப்புகை (Acknowledgment) கொடுக்கக் கூடாது என்று தெரிவித்து விட்டு கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். ஆனால் இன்று பள்ளிக்கு சென்று விசாரித்ததில் அனைத்து மாணவர்களையும்  வேறு மொழி மூலமாக கல்வி கற்கவைக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.  எனது மகனைத் தவிர மற்ற 29 மாணவர்களும் வேறு மொழி மூலம் கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

மேற்கண்ட கூட்டத்தின் போது ஆசிரியர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேரும் பிள்ளைகளில் பலர் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தாரின் பிள்ளகளின் இடை நிற்றல எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும். இதனால் அவர்களின் சமூக மேம்பாடு என்பது கானல்நீராகும். மேலும் அடுத்த பத்தாம் (2023-2024) கல்வி ஆண்டில் நடைபெறும் அரசுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் பெரும் சரிவை சந்திக்கும்.

மேற்கண்ட அரசின் அவசர திட்டத்திற்கு பொறுப்பற்ற கல்விக் குழுக்களும் கல்வித்துறை அதிகாரிகளும் காரணமாகின்றனர். எனது மகன் பயிலும் பள்ளியில் உள்ள கல்விக் குழுவானது ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலை மற்றும் அந்த மக்களின் எதிர்காலம் குறித்து எந்தவித அக்கரையும் காட்டாமல் ஒருதலை பட்சமாக தீர்மானத்தை எழுதியுள்ளனர். கல்வித்துறை அதிகாரிகளும் மாணவர்களின் திறன் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்து ஆராயாமல் ஆசிரியர்களின் பணியை பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் இந்தத் திட்டத்தை அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.  இந்த அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் எந்தப் பள்ளியில் முழுமையான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என்று ஆராயவே இல்லை.  காரணம் கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகள் முன்புவரை முழுமையான சேர்க்கை நடந்துள்ளதாக அறிகிறேன்.  காரணம் அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது 100% ஆக இருந்தது.  அப்பள்ளியை முன் மாதிரியாக கொண்டு செயல்படுவதை விட்டு விட்டு தப்பிக்க செய்த சூழ்ச்சியாகத் தெரிகிறது.

அரசின் இந்த அவசரத் திட்டம் என்பது அதிகாரிகளின்/கல்விக்குழுக்களின் அலட்சியப் போக்கே காரணம் என்றும், இந்தத் திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை முறியடிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காகிதப்புலிகளும், போராட்ட ஆர்வலர்களும் தங்கள் பிள்ளைகளை வசதியான தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு, வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கண்ணீரைக் காட்டுவார்கள்.  தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் துணிவு இல்லாதவர்கள் அரசை எதிர்க்க துணிவு வந்துவிடுமா என்ன?

---------------------------------------------------------------------------------------------------------------------------------
தலைமை ஆசிரியருக்கு அனுப்பிய கடிதம்.

28/06/2013
தீத்திபாளையம்.
அனுப்புனர்,
      மாணிக்கம்.க,
      2/182 ஆர்.கே.வி. கோல்டன் நகர்,
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641010.

பெறுநர்,
      உயர்திருதலைமை ஆசிரியர் அவர்கள்,
      தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
      தீத்திபாளையம்,
      கோயமுத்தூர்641 010.

மதிப்பிற்குறிய அம்மையார்,
     
பொருள்;   தொ.ஊ.ஒ.தொடக்கப் பள்ளிதீத்திபாளையத்தில் ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்தல் குறித்து

பார்வை ;   எனது மகன் திருவிடச் செல்வன் முதல் வகுப்பு தொ.ஊ.ஒ.தொடக்கப்பள்ளிதீத்திபாளையம்.

நேற்று(27.06.2013) தங்களின் அழைப்பின் பேரில் அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆங்கில வழி கல்விஅறிமுகப்படுத்தும் அரசின் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பள்ளிமாணவனின் தந்தை என்ற முறையில் கலந்து கொண்டேன்.

கூட்டத்தில்அரசு அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தும் திட்டம்குறித்து விளக்கி அதன் பொருட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இது குறித்து எனதுகருத்துக்களை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

கல்விஎன்பது சிந்திக்க வைத்து அறிவை வளர்க்க வழிகாட்டுவது.  அது தாய்மொழி வழியாக இருப்பின் குழந்தைகள் புரிந்துகற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.  இதற்குஆதாரமாக பலர் நம்முடைய சமூகத்தில் சான்றாக உள்ளனர்.  முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.  சந்திராயன் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைஆகியோர் தாய் மொழிக் கல்வியையே சிறந்தது என்றும் கூறுகின்றனர்.

எந்தமொழியையும் எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும் ஆனால் சிந்திப்பதைக் கற்றுக்கொடுக்க ஏற்ற வயது ஆரம்பக் கல்வி வயது. இலக்கியத்திற்காக இந்தியாவிலிருந்து நோபல் பரிசு பெற்ற இரவீந்தரநாத் தாகூர்அவர்கள் 40 வயதிற்கு மேல் தான் ஆங்கிலத்தை கற்றார். எனவே சிறு வயதில் வேறு மொழியின்மூலம் கல்வி என்பது குழந்தைகளுக்கு பெரும் சுமையாகும்.

தாய்மொழியில் சுமாராக படிக்கும் மாணவனால் வேறு மொழிவழிக் கல்வியில் படிக்கும் போதுஅந்த மாணவனால் முற்றிலுமாகக் கல்வியின் மீது வெறுப்பு ஏற்படுகிறது.  தாய்மொழி வழியில் பயிலும் போது இயல்புவாழ்க்கையோடு இருப்பதால் இயல்பாக கருத்துக்களை உள்வாங்கி சிந்தித்து மாற்றுக்கருத்துக்களை உருவாக்க வழி செய்கிறது.  அதுமாறாக வேறு மொழி வழியில் கற்கும் போது சிந்திக்க எதுவும் இல்லாமல் வெறும்மனப்பாடம் செய்யும் மனிதனாகவே உருவாகிறான். நிறுவனங்களுக்கு தேவையான மனிதஎந்திரமாக உருவாக்கப்படுகிறான். தாய் மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருவாக்கும்.மாற்று மொழிக் கல்வி தன்னம்பிக்கையை உருக்குலைப்பதாக உள்ளது.

அரசின்இந்தத் திட்டம் குறித்து நட்பு வட்டத்தில் விவாதித்த போது அரசுப் பள்ளிகளில் கல்வியின்தரம் குறைவாக இருப்பதாலும், தனியார் பள்ளிகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும்பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளின் சேர்த்து விடுகின்றனர் என்றகருத்து கூறப்பட்டது.

“அரசுப் பள்ளிகளுக்குப் போட்டியாக தனியார்பள்ளிகள்” என்ற நிலை மாறி சிறுசிறு பள்ளி நிறுவனங்களைப்பார்த்து, அவைகளுக்குப் போட்டியாக “வேறு மொழிக்கல்வி” என்ற தனது திட்டத்தைஅறிவிக்கும் போக்கு என்பது அரசு பள்ளிகளின் இயலாமையையே காட்டுகிறது.தனியார் பள்ளிகளில் பயிற்சி பெறாத தகுதியற்றவர்களையே பெரும்பாலும் ஆசிரியராகநியமிக்கப்படுகின்றார்கள். ஆனால்  அரசுப்பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் நன்கு பயிற்சி பெற்ற தகுதி உடைய ஆசிரியர்களேநியமிக்கப்பட்டு உள்ளனர்.  இப்படி உள்ளநிலையில் தகுதியற்றவர்களோடு, பயிற்சி பெற்று தகுதியோடு உள்ளவர்கள் தோற்றநிலையைக் காட்டுகிறது.

நமதுநாட்டில் மற்ற மாநிலங்களில் ஆரம்பக் கல்வி என்பது தாய்மொழிக் (அம்மாநிலத்தின்)கல்வியாக உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேட்டின் காரணத்தால் வேறு மொழிக் கல்விபரவலாக்கப்பட்டுள்ளது. இங்கு IAS IPS போன்ற போட்டித் தேர்விற்கு ஏற்ற மாணவர்கள் மிகஅரிதாகி வருகின்றனர்.  இங்கு உள்ள IAS IPS போன்ற பதவிகளுக்கு வேறு மாநிலத்தவர்களேமிகுந்துள்ளனர்.  மேலும் இதனால் IIT போன்ற அதிஉயர் கல்வி பயில தகுந்த மாணவர்களைஉருவாக்குவதில்லை. பள்ளிப் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதோடுநின்றுவிடுகிறது. இயல்பு வாழ்க்கையோடு ஒன்றவிடாமல் தனித்து வாழவே பழக்குகிறது. ஆரம்பக்கல்வி என்பது அந்த மாணவனின் எதிர்காலத்தை வழிநடத்தக் கூடியது. எனவே சாதாரண ஏழைமாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக தன்னம்பிக்கையோடு வளர தாய்மொழிக்கல்வியைதொடர்ந்து  மேலும் மேம்படுத்த வேண்டும். எனவேவேறு மொழிமூலம் கல்வி என்ற திட்டத்தை அறிமுகப்படுவத்துவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளின்தரத்தை மேம்படுத்துவது எப்படி? மாணவர் சேர்க்கை குறைவதை தடுப்பது / உயத்துவதுஎப்படி என ஆலோசிப்பது சிறந்தது. “புலியைப்பார்த்து பூனை சூடு”போட்டக் கொள்ளட்டும்.  ஆனால்பூனையைப் பார்த்து புலி தன் காலை வெட்டிக் கொள்ள வேண்டாம் எனகேட்டுக் கொண்டு, “வேறு மொழி மூலம் கல்வி”என்ற திட்டத்திற்கு எனது கடும் எதிர்ப்பை மிகத் தாழ்மையுடன் பதிவு செய்து கொள்கிறேன்.
நன்றி

இப்படிக்கு

மாணிக்கம்.க